ஜபல்பூர்: பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்குப் பிணை வழங்கப்பட்டதால், வெளியில் வந்தவன்தான் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த பெண்ணை கொடூரமாக கொன்றிருக்கிறான்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான சிவகுமார் என்பவன், கடந்த செப்டம்பர் மாதம் தான் வசிக்கும் பகுதியிலிருந்த 17 வயது பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரத்தில், போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கடந்த இரண்டு மாதங்களாகச் சிறையிலிருந்து பத்து நாட்களுக்கு முன்பு பிணையில் விடுவிக்கப்பட்ட சிவகுமார், தன்னை சிறைக்கு அனுப்பிய பெண்ணைப் பழிவாங்கத் துடித்தான். அந்தப்பெண்ணின் நடவடிக்கையைக் கண்காணித்து வந்தான். நேற்று முன்தினம் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் நின்று நோட்டம்விட்ட சிவக்குமார், பெண்ணின் பெற்றோர் வெளியில் சென்ற அடுத்த நிமிடமே வீட்டுக்குள் நுழைந்து அங்கே தனியாக இருந்த பெண்ணை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளான்.
சிவக்குமாரை பார்த்ததும் அந்தப் பெண் அலற, சத்தம் கேட்டு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணின் சகோதரர் ஓடிவர, அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர் அவனைப் பிடித்து உதைத்தனர். அங்கு வந்த காவலர்கள் சிவகுமாரைக் கைதுசெய்தனர். படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழந்தார்.
முப்பது முறை கத்தியால் குத்தப்பட்டதால் அதிக ரத்தம் வெளியேறி அந்தப் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி பேசியுள்ள காவலர்கள், “பிணையில் வெளியில் வந்த சிவகுமார், தன்னைச் சிறைக்கு அனுப்பிய பெண்ணைக் கொலை செய்துள்ளான். தான் சிறைக்குச் சென்ற பிறகு அதற்குக் காரணமானவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்துள்ளார் சிவக்குமார்.
“அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக்கொள்ள சிவகுமார் முயன்றுள்ளார், அதற்குள் பொதுமக்கள் வந்து அவனைப் பிடித்தனர்,” எனக் கூறியுள்ளனர்.