நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தயார் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பம் செய்துள்ளார்.
அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றுகிறார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
இந்த நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி திகார் சிறையில் ஆள் இல்லை என்ற தகவல் வெளியானது.
இந்த பணிக்கு நான் தயார் என ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
அவர் திகார் சிறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால், தண்டனை தள்ளிப்போவதாக செய்திகள் வருகின்றன.
“சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அந்தப் பணியை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
திரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அண்ணா பதக்கம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் விருதுகளைப் பெற்றவர் சுபாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity