காந்திநகர்: தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஆரிப், வயது 26, ஜொள்ளு சிவா, வயது 20, ஜொள்ளு நவீன், வயது 20, சிண்டகுண்டா சென்னை கேசவலு, வயது 20 ஆகிய நால்வரையும் போலிசார் வெள்ளிக்கிழமை அதி காலை 3.30 மணிக்கு ‘என்கவுன்ட்டர்’ செய்து கொன்றனர்.
இதற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தலைமையில் இந்த ‘என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது நால்வரும் தப்ப முயற்சி செய்ததால் அவர்கள் ‘என்கவுன்ட்டர்’ செய்தோம் என சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.
இந்த என்கவுன்ட்டர் குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் ‘என்கவுன்ட்டர்’ செய்த போலிசாருக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.
சைபராபாத் போலிஸ் ஆணையரான சஜ்ஜனார் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என பெயர் பெற்றவர்.
இவர், 2008ஆம் ஆண்டில் வாரங்கல் மாவட்ட போலிஸ் சூப்பரிடெண்டாக இருந்தபோது வாரங்கல் நகரில் பொறியியல் கல்லூரி மாணவிகள் இருவர் மீது அமிலம் வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் சீனிவாஸ் ராவ் (வயது 25), பி.ஹரிகிருஷ்ணா, பி.சஞ்சய் (22) ஆகிய மூவரை போலிசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தப்பியோட முயற்சி செய்ததாகக் கூறி மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேபோன்றுதான் இப்போது சைபராபாத்திலும் ‘என்கவுண்ட்டர்’ மூலம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இது சஜ்ஜனாருக்கு 2வது ‘என்கவுண்ட்டர்’ ஆகும்.
இந்த நிலையில் ‘என்கவுன்ட்டர்’ குறித்து மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணையைத் தொடங் கியது.