இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 293 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 82 பேர் எதிராக வாக்களித்தனர்.
மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே அதன் நிறைகுறைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அதற்கு முன்னரே அதுபற்றி கருத்துரைக்க வேண்டாம் என்றும் அமைச்சர் அமித் ஷா கூறினார்.
“குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன். ஆகவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்ய வேண்டாம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற காங்கிஸ் கட்சித் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, “இந்த மசோதா எந்தச் சமயத்தினருக்கும் சிறுபான்மையினருக்கும் 0.001% கூட எதிரானது அல்ல,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
“பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாத அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையே தகர்ப்பதாக உள்ளது,” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடினார்.
ஆனால், இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவிற்கும் எதிரானது அல்ல என்றும் இதனால் சம உரிமையானது எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் விளக்கினார்.
முன்னதாக, சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, ‘இந்து-முஸ்லிம் புலப்படாப் பிரிவினை’ என இந்த மசோதாவைக் குறிப்பிட்டுச் சாடியிருந்தார்.
இந்நிலையில், “சமயத்தின் பெயரில் நாட்டைப் பிளவுபடுத்தியது காங்கிரஸ் கட்சிதான்,” என்று குற்றம் சாட்டினார் அமித் ஷா.
“1971ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, பங்ளாதேஷில் இருந்து வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கத் தீர்மானித்தார். ஆனால், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்காதது ஏன்? 1971க்குப் பிறகும் பங்ளாதேஷில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு இன அழிப்பு இன்னும் நின்றபாடில்லை,” என்றார் அவர்.
மசோதா மீது நேற்று மாலையில் விவாதம் நடைபெறுவதாக இருந்தது. அதன்பின் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஏழு வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள் இன்று 11 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.