பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் ஏறக்குறைய 12ஐ கைப்பற்றி சட்டமன்றத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது.
அந்த மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. 15 இடங்களில் குறைந்தபட்சம் ஆறு இடங்களைப் பிடித்தால் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் பாஜக தேர்தலைச் சந்தித்தது.
இடைத்தேர்தல் நடந்த 15 தொகுதிகளில் 12 தொகுதிகள் காங்கிரசிடம் இருந்தன. ஆனால் அந்தக் கட்சி இரண்டே இரண்டு தொகுதிகளை மட்டும்தான் பிடித்துள்ளது.
தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் துரோகிகளை மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரான குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
அந்தக் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 106 எம்எல்ஏக்கள் பலத்துடன் பாஜக ஆட்சி எடியூரப்பா தலைமையில் அமைத்தது. தொடர்ந்து 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதனையடுத்து காலியான அந்த 17 தொகுதிகளில் 15ல் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 13 பேர் பாஜக சார்பில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆறு தொகுதிகளை வென்றால் சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற நிலையில் பாஜகவுக்கு இப்போது 12 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.
இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அரியணை ஏறிவிட்டது. இந்த வெற்றி பற்றி கருத்து கூறிய முதல்வர் எடியூரப்பா, அதிகமான வாக்குகளை அளித்து மக்கள் பாஜகவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தார்.
மாநிலத்தை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புத் தரும்படி காங்கிரஸ் கட்சியையும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியையும் அவர் கேட்டுக்கொண்டார்.