புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு வரும் 16ஆம் தேதிக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள சிறை அதிகாரிகளுக்கு 10 தூக்குக் கயிறுகளைத் தயார் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்வார இறுதிக்குள் தூக்குக் கயிறுகள் தயார் செய்யப்படும் என சிறை அதிகாரி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
எனினும் எதற்காக, யாரைத் தூக்கிலிட இந்தத் தூக்குக்கயிறுகள் தயார் செய்யப்படுகின்றன என்பது தமக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.
“ஒரு தூக்குக் கயிறைத் தயார் செய்ய 3 நாட்களாகும். குறைந்தபட்சம் ரூ.1,725 செலவாகும். அதிக கயிறுகள் தேவைப்படுவதால் கூடுதல் தொழிலாளர்கள் பயன்படுத்தப்
படுவார்கள்,” என்றார் விஜயகுமார்.
மருத்துவ மாணவி நிர்பயா சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பேருந்தில் சென்றபோது சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரும் அளித்த கருணை மனுவை அதிபர் நிராகரித்தார். எனவே, அடுத்த சில தினங்களில் இவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட அக்ஷய் குமார் சிங் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உடனடியாக நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றவாளிகள் நான்கு பேரையும் விரைவில் தூக்கிலிட வேண்டும் என மாணவி நிர்பயாவின் பெற்றோர் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.