ராஞ்சி: இந்தியாவில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் ஒன்று எரிக்கப்படுகிறார்கள் அல்லது சுடப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார். இதுகுறித்துப் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மவுனம் காப்பதாகவும் ராகுல் சாடினார்.
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் இப்போது அமைதி காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், இத்தகைய சம்பவங்களால் உலகின் பாலியல் பலாத்கார தலைநகராக இந்தியா மாறிவிட்டது என விமர்சித்தார்.
“பிரதமர் மோடி ஜார்க்கண்டுக்கு வரும்போதெல்லாம் விவசாயிகளைப் பாதுகாப்போம் என்கிறார்.
“வலுக்கட்டாயமாகத் தங்கள் நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்த காரணத்தால் கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையை அவருக்குத் தெரிவியுங்கள்,” என்றார் ராகுல்.
விவசாயிகள் கொல்லப்படுவதாகவும், அவர்களின் நிலம் பறிக்கப்படுதாகவும் குறிப்பிட்ட ராகுல், கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் 15 கார்ப்பரேட் நிறுவனங்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் கடனை மட்டும் மோடி அரசு தள்ளுபடி செய்யவில்லை என்றார்.
“அண்டை மாநிலமான சத்தீஷ்கரில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உள்ளது. ஆனால், ஜார்க்கண்டில் ரூ.1,300 மட்டுமே கொடுக்கப்படுகிறது.
“ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இங்கும் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும். மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நீர், வனம், நிலம் ஆகியவை உரியவர்களிடமே ஒப்படைக்கப்படும்,” என்றார் ராகுல் காந்தி.