உத்தரப் பிரதேசத்தில் மாணவிகளைத் தொந்தரவு செய்த ஆடவரை பெண் போலிஸ் ஒருவர் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க ‘ஆன்டி ரோமியோ’ படை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஆதாரத்துடன் பிடித்து தண்டனை வாங்கி கொடுப்பதுதான் இந்த ‘ஆன்டி-ரோமியோ’ படையின் வேலை.
இந்நிலையில், கான்பூரின் பிதூர் பகுதியில் நேற்று பள்ளி சென்ற மாணவிகளை, சிலர் தொந்தரவு செய்ததாக ‘ஆன்டி ரோமியோ’ படைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ‘ஆன்டி ரோமியோ’ குழுவைச் சேர்ந்த போலிசார், பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை மோசமான வார்த்தைகளால் ஒருவர் கிண்டல் செய்வதைக் கண்டனர்.
அந்த ஆடவரை மடக்கிப் பிடித்த ஒரு பெண் போலிஸ், தனது காலணியைக் கழற்றி சரமாரியாக அந்த ஆடவரைத் தாக்கினார்.
அதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பின்னர் அந்த நபரை அழைத்து வந்து பெண்களிடம் மன்னிப்பு கேட்கவைத்து, பின் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இளைஞரைத் தாக்கிய பெண் காவலர் பிதூர் காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த சஞ்சல் சவுரைசா என்று தெரியவந்துள்ளது. அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கத் தவறும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity