புதுடெல்லி: மகாகவி பாரதியார் நீதி, சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாரதியாரை நினைவு கூரும் விதமாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்வதாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் எழுச்சியூட்டும் விதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார் மகாகவி பாரதியார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரம் அளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது,” என்றும் பிரதமர் மோடி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.