பெற்றோர் மட்டுமல்லாமல் இனி மாமனார், மாமியாரையும் சரியாகக் கவனிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை காத்திருக்கிறது. இதுதொடர்பான மசோதா ஒன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களை முறையாகப் பராமரிப்பது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் மாமனார், மாமியாருக்கும் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பழைய மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி மாமனார், மாமியாரைச் சரியாகக் கவனிக்காத மருமகனுக்கும் மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் இந்தச் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது. அதன்படி மாமனார், மாமியாருக்கான பராமரிப்புச் செலவு உச்சவரம்பு பத்தாயிரம் ரூபாய் என்பது நீக்கப்பட்டுள்ளது.
இனி அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் அதிக தொகையை கொடுக்க வேண்டி இருக்கும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.