அமராவதி: பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத்தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்ட மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்போது பாலியல் குற்றங்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக ஆந்திரா திகழும்.
அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 இளையர்கள் கைதாகினர்.
இந்நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட 10ஆவது நாளன்று குற்றவாளிகள் 4 பேரும் போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாராட்டி வரவேற்றார். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ஆந்திராவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் புதிய சட்டத்துக்கு ‘இஷா’ சட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் புதிய சட்ட மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஹைதராபாத் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்புர்கர், முன்னாள் நீதிபதி ரேகா பிரகாஷ், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகிய மூவரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைக் குழு அடுத்த ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.