தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படுவதுடன், சர்க்கரை நோய் வராது, கொழுப்பு கட்டுக்குள் இருக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி கணேஷ் சிங் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதம் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பாஜக எம்.பி கணேஷ் சிங் பேசியபோது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, கணினி நிரலிடல் சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்டிருந்தால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருந்திருக்கும் என்று கூறினார்.
உலகில் உள்ள சில இஸ்லாமிய மொழிகள் உட்பட 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு உருவானவை என்றார் அவர்.
இந்த மசோதா குறித்து சமஸ்கிருதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, “சமஸ்கிருத மொழி நெளிவு சுழிவுகள் நிறைந்த மொழி. ஒரே வாக்கியத்தை பல வழிகளில் பேச முடிகிறது,” என்றார்.
பல ஆங்கில வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்ற அவர், இதுபோன்ற தொன்மையான மொழியை ஊக்குவிப்பதால், வேறு எந்த மொழியையும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.