குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் இதுவரை மூவர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியான நிலையில், போலிசாரின் தடியடியில் காயமடைந்த அசாம் மாநில ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க புதிய சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. இதை ‘சமய ரீதியில் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை’ எனக் கூறி, பல எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.
ஆயினும், நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மேலவையிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு அதிபர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இருந்தாலும், இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. பல இடங்களில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ளன. ஆனால், மத்திய பட்டியலில் இடம்பெற்றுள்ள சட்டத்தை அமல்படுத்த மறுப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதை ஒத்திவைத்துள்ளார் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே. அதேபோல, பங்ளாதேஷில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர் என்று இந்திய அரசு சொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சரும் உள்துறை அமைச்சரும் தங்களது அதிகாரபூர்வ இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
இதனிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அணுக்கமாக ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.