புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதற்கிடையே டெல்லி திகார் சிறை அதிகாரிகள் சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். பீகார் மாநிலம் பக்சர் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் 10 தூக்குக் கயிறுகளை தயார் செய்து தரும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் 10 தூக்குக் கயிறுகளும் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடும். சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அந்தக் கயிறுகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.
இந்நிலையில், தூக்கில் தொங்க விடும் பணிகளைச் செய்ய இருவரை அனுப்புமாறு உத்தரப் பிரதேச மாநில அரசை திகார் சிறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து உத்தரப் பிரதேச கூடுதல் டி.ஜி.பி. அனந்தகுமார் இரு ஊழியர்களை திகார் சிறைக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவர்களில் ஒருவர் 55 வயது பவன்.
இதன்மூலம் தூக்குக் கயிறும் தூக்கில் போடுவதற்கான வேலைகளைச் செய்யும் ஊழியர்களும் தயார் நிலையில் இருப்பது உறுதியாகி உள்ளது. சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அடுத்த ஒருசில நாட்களில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நிர்பயாவின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், “நீதி தாமதமாகி வருகிறது. குற்றவாளி மனு மீதான விசாரணையின்போது என்னையும் அதில் சேர்க்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.