காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு தவறான மருந்து அளிக்கப்பட்டதால் ரத்த வாந்தி எடுத்து அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த புதன்கிழமை (டிசம்பர் 11) டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டிருந்த தன் குழந்தைக்கு வீட்டுக்கு அருகில் இருந்த மருந்துக்கடைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொடுத்தார்.
குழந்தையின் உடல் நிலை சீரடையாததால் மறுநாள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அதே மருந்துக் கடைக்குச் சென்றார் அந்த இளம்பெண்.
அந்த மருந்துக்கடைக்காரர் குழந்தைக்கு ஊசிபோட்டு தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
வீட்டுக்கு வந்த பிறகு குழந்தை ரத்த வாந்தி எடுத்ததைப் பார்த்து பதறிப்போன தாய், அருகிலிருந்த மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்றார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
‘இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. “எந்தவொரு நோயாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது,” என போலிசார் தெரிவித்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity