இந்தியாவின் தென்மத்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு முற்றிலும் புதுமையான முறையில் குடிநீரை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யப்படும் இயந்திரம் ஒன்று கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 12) செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டது.
காற்றை உள்ளே இழுத்து அடுத்தடுத்த பல்வேறு உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் இறுதியில் அதனை வடிகட்டி ஒரு தொட்டிக்கு அனுப்புகிறது.
அந்தத் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரை அந்த இயந்திரம் உற்பத்தி செய்கிறது.
இந்தப் புது முறையில் தயாரிக்கப்படும் குடிநீரின் ஒரு லிட்டர் போத்தல் 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
போத்தல் கொண்டு சென்றால் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தென் மத்திய ரயில்வேயின் பசுமை, தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தண்ணீர் உற்பத்தி இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளதாக தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராகேஷ் கூறினார்.
இதன் பயன்பாடு சிறப்பாக அமைந்தால் இதர ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற இயந்திரம் அமைக்கப்படும் என்றார் அவர்.
உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்துள்ள இந்த குடிநீரை மத்திய நீர்வளத்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளதாகவும் ராகேஷ் சொன்னார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity