புதுடெல்லி: எந்த நேரமும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் உள்ள நிர்பயா பாலியல் கொடூர கொலை குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் கடும் மன உளைச்சலில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அவர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
நால்வரும் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு புலம்பித் தவிப்பதாக அதிகாரிகள் தரப்பினர் கூறினர். இதற்கிடையே, குற்றவாளிகள் நால்வரையும் தூக்கில் போடத் தயார் என உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகர் சிறைச்சாலை பணியாளர் பவன் ஜல்லாத், 57, முன்வந்துள்ளார்.
பவனின் கொள்ளு தாத்தா லட்சுமண் ராம் தான் சுதந்திரப் போராட்டத்தின்போது பகத் சிங்கை தூக்கிலிட்டவர். இவரது தாத்தா கல்லு பிரபல குற்றவாளிகள் பில்லா, ரங்காவை தூக்கில் தொங்கவிட்டவர். 2013ஆம் ஆண்டில் தூக்கில் போடும் வேலைக்காகச் சேர்க்கப்பட்ட பவனுக்கு இதுவரை அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.