புதுடெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வழக்குக் குற்றவாளிகளைத் தாம் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் வர்த்திகா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளிகள் அறுவரில் ஒருவன் மட்டும் சிறையிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டான். மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டான்.
இந்நிலையில், எஞ்சியுள்ள நால்வரும் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிய வந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் டெல்லி திகார் சிறையில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக குற்றவாளிகள் நால்வரும் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக அதிபர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், நிர்பயா வழக்குக் குற்றவாளிகளைத் தூக்கிலிட தாம் தயாராக இருப்பதாக வர்த்திகா சிங் கூறியுள்ளார்.
தமது இந்தக் கோரிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள திரைப்பட நடிகைகள், பெண் எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இதன்மூலம் சமுதாயத்தில் பெண்களால் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சருக்கு ரத்தத்தில் எழுதிய கடிதத்தை அவர் அனுப்பியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிர்பயாவைப் போலவே தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக போலிசார் என்கவுன்டர் மூலம் குற்றவாளிகள் நால்வரையும் சில நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர்.