புதுடெல்லி: உன்னாவ் நகரில் சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை நாளை மறுதினம் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.
உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால் செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்து பாஜக தலைமை நீக்கியது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
ஆனால், குல்தீப் செங்காருக்கான தண்டனை விவரத்துக்கான வாதம் நேற்று நடக்கும் என நீதிபதி தர்மேஷ் சர்மா அறிவித்திருந்தார். அதன்படி நீதிபதி தர்மேஷ் சர்மா முன் நேற்று விசாரணை நடந்தது.
சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதிடுகையில், “எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எளிய தண்டனை வழங்கிடக்கூடாது,” என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் தமது வாதத்தில், “பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால வாழ்க்கைக்குக் கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்,” எனத் தெரிவித்தார்
செங்கார் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதிடுகையில், “குல்தீப் செங்கார் மக்கள் பணியாற்ற இருப்பதால் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்.
“அவருக்கு வயது குறைந்த (மைனர்) இரு மகள்கள் இருப்பதால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கருதியும் செங்காரின் சிறை வாழ்க்கை ஒழுக்கமாக இருந்ததைக் கருத்தில் கொண்டும் தண்டனையைக் குறைக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார்.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா, நாளை மறுதினம் 20ஆம் தேதி குல்தீப் செங்காருக்கான தண்டனை விவரத்தை அறிவிப்பதாகக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தார்.