புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டார்.
மீதமுள்ள 4 பேரில் மூன்று பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் நான்காவது குற்றவாளியான அக்ஷய் குமார் சிங், அண்மையில் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு டிசம்பர் 17ஆம் தேதி (நேற்று) விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு சீராய்வு மனு மீது விசாரணை தொடங்கியபோது, வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகுவதாகத் தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
“இந்த வழக்கில் நிர்பயா தாயாருக்கு ஆதரவாக முன்னிலையான வழக்கறிஞர்களில் ஒருவர் எனது குடும்பத்தினர். ஏற்கெனவே எனது குடும்பத்தினர் ஒருவர் முன்னிலையாகியுள்ளார். இதனால், வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்கிறேன். புதிய நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரணை நடக்கும்,” என்றார் நீதிபதி பாப்டே.
இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் கூறுகையில், “குற்றவாளியின் சீராய்வு மனு இன்று தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்தேன்.
“குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற 7 ஆண்டுகளாக நாங்கள் காத்திருப்பதுபோல் நாங்கள் கூடுதலாக ஒரு நாள் காத்திருக்க வேண்டும். இந்த சீராய்வு மனு நாளை தள்ளுபடி செய்யப்படும் என நம்புகிறேன். குற்றவாளிகள் விரைவில் தூக்கில் போடப்படுவார்கள்,” என்றார்.