திருவனந்தபுரம்: இதய நோயாளிக்கு உதவ வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தின் பேரில் லாட்டரிச்சீட்டு வாங்கியவருக்கு 70 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் சிவன். கட்டடத் தொழிலாளியான இவர் அண்மையில் தன் மனைவி ஓமனாவுடன் ஆழப்புழாவில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்தார்.
சாமி தரிசனம் முடிந்து கோவிலுக்கு வெளியே வந்தபோது அங்கு லாட்டரிச் சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த ஒருவர் தாம் ஒரு இதய நோயாளி என்றும் அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு உதவும் வகையில் லாட்டரிச் சீட்டு வாங்குமாறு அந்த நபர் கேட்டபோது வாங்க மறுத்துள்ளார் சிவன்.
ஆனால், லாட்டரி விற்பவர் மீது ஏற்பட்ட இரக்கம் காரணமாக ஒரே ஒரு சீட்டு வாங்கும்படி கணவர் சிவனை நச்சரித்துள்ளார் மனைவி ஓமனா.
இதையடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிச் சென்றார் சிவன். அந்தச் சீட்டுக்குத் தற்போது 70 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
இதனால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள சிவன் தனது கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழப்போவதாகவும், பெரிய வீடு ஒன்றை வாங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.