ஹைதராபாத்: அண்மையில் தெலுங்கானாவில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளில் இருவர் மேலும் 9 பெண்களை சீரழித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட தெலுங்கானா போலிசார் மருத்துவரைக் கொன்ற 4 பேரையும் உடனடியாகக் கைது செய்தனர். பின்னர் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட நால்வரில் இருவர் ஏற்கெனவே 9 பெண்களை இதேபோல் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, எரித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. முக்கிய குற்றவாளியான முகமட் ஆசிப் 6 பெண்களையும் சென்னகேசவலு 3 கொலைகளையும் செய்துள்ளனர்.
ஹைதராபாத், மெகபூப் நகர், சங்காரெட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடகாவிலும் இவர்கள் இந்தப் படுகொலைகளைச் செய்துள்ளனர். மருத்துவர் திஷாவைப் போலவே இந்த 9 பெண்களையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, அதன் பிறகு எரித்துக் கொன்றதாக குற்றவாளிகள் தங்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து குற்றவாளிகள் கூறியது உண்மைதானா என்பதைக் கண்டறிய 4 சிறப்புப் படைகள் ஆந்திரா, கர்நாடகாவுக்கு விரைந்துள்ளன.
கொலை நிகழ்ந்த சமயங்களில் குற்றவாளிகள் எங்கிருந்தனர் என்பதை உறுதி செய்வதற்கு அவர்களுடைய கைத்தொலைபேசி எண்களை வைத்துத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
பெண் மருத்துவருக்கு முன்பே 3 மாநிலங்களைச் சேர்ந்த 9 பெண்களை இவர்கள் சீரழித்து எரித்துக் கொன்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

