காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவில் சிக்கியுள்ள 900க்கும் மேற்பட்ட தமிழக லாரி ஓட்டுநர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் காஷ்மீரில் இருந்து ஆப்பிள் பழங்களைக் கொண்டுவர அங்கு சென்றுள்ளனர்.
கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சுற்றுலா, இலகு ரக வாகனங்களையும் மட்டுமே ராணுவத்தினர் அனுமதிக்கின்றனர். இதனால் ஆப்பிள் ஏற்றிவர தமிழகத்தில் இருந்து சென்றுள்ள 450 லாரிகள் காஷ்மீரை விட்டு வெளியேற முடியாமல் நிலைகுத்தி உள்ளன.
அங்குள்ள சோபியான் மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட தமிழக லாரி ஓட்டுநர்களும், அவர்களது உதவியாளர்களும் கடந்த 10 நாட்களாக முடங்கி உள்ளனர்.
“தமிழகத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்குப் பல பொருட்களைச் சரக்கு லாரிகளில் ஏற்றி வந்து ஒப்படைத்தோம். பின்னர் டெல்லியில் இருந்து கடந்த 7ஆம் தேதியே காஷ்மீருக்கு வந்துவிட்டோம்.
“இந்நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுக்குக் கூடப் பணமின்றி தவித்து வருகிறோம்,” என நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் என்பவர் தகவல் தெரிவித்ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீருக்குச் சென்ற தமிழக லாரி ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity