வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் நடந்த சந்திப்பும் பேச்சுவார்த்தையும் திருப்திகரமாக இருந்தது என அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோரை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங், அமெரிக்கத் தரப்புடன் பாதுகாப்பு, ராணுவம், இருதரப்பு நல்லுறவு குறித்து விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம் கண்டுள்ளதாகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெற்றது. பின்னர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனையும் சந்தித்துப் பேசினார் ராஜ்நாத்சிங்.
இதையடுத்து செய்தியாளர்களி டம் பேசிய அவர், இந்தியாவின் ராணுவ வலிமை அதிகரித்து வருகிறது என்றார்.
பிற நாடுகளின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், இதுதான் இந்தியாவின் குணம் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
“இந்திய ராணுவம் தற்போது முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுள்ளது. இனி தீவிரவாத முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்குச் செல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே அழித்துவிடலாம்.
“பாகிஸ்தானுடன் எப்போதும் சுமூக உறவை மட்டுமே இந்தியா நாடி உள்ளது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார். ஆனால் பதிலுக்கு கார்கில் போரைப் பரிசாக தந்தனர். பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடன் சுமூக உறவை விரும்பினார். இப்போதும் பதிலுக்கு என்ன செய்தனர் என்பதை அனைவரும் அறிவர்,” என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியபோது குறிப்பிட்டார் ராஜ்நாத் சிங்.