புதுடெல்லி: தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை அவர் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்ததாகத் தெரிவித்தார்.
“கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை நானும் பிரதமரிடம் முன்பே வலியுறுத்தி உள்ளேன்.
“தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த 400 ரூபாய் மாதாந்திர உதவித் தொகையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1000 ரூபாயாக உயர்த்தினார். இலங்கைத் தமிழர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியுடன், தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன,” என்றார் முதல்வர் பழனிசாமி.