ஆசியாவின் ஆகப் பெரிய செல்வந்தரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
நடப்பாண்டில் அவரது சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 18 பில்லியன் டாலர் (S$24 பில்லியன்) இணைந்துள்ளது.
நடப்பாண்டில் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 40 விழுக்காடு உயர்ந்ததே சொத்து மதிப்பை ஏற்றிவிட்டது.
முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் குழுமத்திலும் அதன் புதிய வர்த்தகத்திலும் பங்குகளை வாங்கிக் குவிக்கிறார்கள். குறிப்பாக, அந்தக் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் சில்லறை வர்த்தகத்திலும் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்துளளது.
புதிய செல்வ மதிப்பையும் சேர்த்து முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 61.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என கோடீஸ்வரர்களுக்கான புளூம்பெர்க் குறியீடு தெரிவித்துள்ளது.
இவரோடு ஒப்பிடுகையில், அலிபாபா குழு நிறுவனர் ஜேக் மாவின் நிகர சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
அதேபோல அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பு 13.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.