லக்னோ: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் சில மாநிலங்களில் வன்முறையாக வெடித்த சம்பவங்களில் 15க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11 பேர் உரிழந்தனர். இவர்களில் இருவர் கடந்த 20ஆம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் பலியாகினர்.
கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று நாஹ்தாவுர் பகுதியில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மீரட் மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் நேற்று டெல்லியில் இருந்து கார் மூலம் சென்றனர். அவர்களை மீரட் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்திய போலிசார் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.