பெங்களூரு: கர்நாடகம் - மகாராஷ்டிர மாநிலங்களின் எல்லையில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. மொழி அடிப்படையில் அந்த மாவட்டம் தங்களுக்கே சொந்தம் என்று மகாராஷ்டிர மாநிலம் கூறி வருகிறது.
இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பெலகாவி யாருக்குச் சொந்தம் என்பதில் நீண்ட காலமாகப் பிரச்சினை நீடித்து வருகிறது.
முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றதும் இந்த எல்லைப் பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரில் சிவசேனா கட்சியினர் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காவல்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதிலுக்குக் கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இருமாநில எல்லையில் ஏராளமான காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, மராட்டியத்திற்குச் சொந்தம் என்று கூறியுள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்தவ் தாக்கரேயைக் கண்டித்துக் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகத்தின் ஓர் அடி நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“மகாஜன் அறிக்கையில், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு எந்தெந்தப் பகுதிகள் சேரவேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ், பெலகாவி விவகாரம் பற்றி பேசி இரு மாநிலங்களின் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
“கர்நாடகத்தின் ஓர் அடி நிலம்கூட விட்டுக்கொடுக்க முடியாது. நாம் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
“நிலம், நீர், மொழி ஆகியவற்றில் சமரசத்திற்கு இடமில்லை. கன்னடர்களின் நலனைப் பலிகொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை,” என்று முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கும்படி எல்லைப் பிரச்சினையை உருவாக்குவது முறையல்ல என்று மேலும் எடியூரப்பா கூறினார்.