புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியுரிமை திருத்த சட்டம் பற்றி உலக நாடுகளிடம் விளக்கம் அளித்துவிட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் இந்த சட்டம் பற்றி வெளிநாட்டு தூதர்களிடம் உரிய முறையில் விளக்கம் அளிக்காததால், வெளிநாட்டு தூதர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது.
இது பற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு கூறினார். “பக்கத்து நாடுகளில் சமய ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் நடைமுறையை, குடியுரிமை திருத்த சட்டம் விரைவுபடுத்தும்.
எந்த வகையிலும் இந்த சட்டம், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாது என்பதை பல்வேறு உலக நாடுகளுக்கும் மத்திய அரசு விளக்கிக் கூறியுள்ளது” என்றார். அதேவேளையில், பிரதமர் மோடி, பங்ளாதேஷ் பிரதமருடன் இவ்விவகாரம் குறித்து ஆலோசித்தாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க ரவீஷ் குமார் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுடெல்லியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.