அமெரிக்காவின் மத்திய வான்வெளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்தியா அதன் விமான நிறுவனங்கள் ஈரான், ஈராக், பாரசீக வளைகுடா, ஓமான் வளைகுடா ஆகியவற்றின் ஆகாயவெளியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பொது பயணிகள் விமான இயக்குநரகம் (டிஜிசிஏ), “சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடனான கூட்டத்தில், நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரப்பட்டது. ஆனால், எந்த விதமான ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை,” என்று தெரிவித்தது.
விமானத் தடங்கள் மாற்றிவிடப்பட்டால், பயண நேரம் அதிகரிப்பதுடன் எரிபொருள்களும் அதிகம் செலவாகும்.
இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான ஏர் இந்தியாவின் பல விமானங்கள் அந்தத் தடத்தைப் பயன்படுத்துகின்றன. சில இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் அந்தத் தடத்தில் சேவைகளை வழங்குகின்றன.
அண்மைய நிலவரத்தால் அந்த விமானச் சேவைகளின் தடம் மாற்றப்படும் என்று கூறப்பட்டது.
ஐஏடிஏ எனப்படும் அனைத்துலக வான்வழி போக்குவரத்துச் சங்கம், விமானங்களின் பாதை மாற்றிவிடப்படுவதைக் கையாளவும் ஒருங்கிணைக்கவும் குழு ஒன்றைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity