இந்தியாவில் நேற்று பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து, வங்கி உட்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எச்எம்எஸ், சிஐடியூ ஆகியவற்றுடன் சுமார் பத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் கலந்துகொண்டன. பிரதமர் நரேந்திர மோடியின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்நிய நேரடி முதலீடு, ஏர் இந்தியா போன்ற பொது அமைப்புகளை தனியார்மயமாக்கல், பொது வங்கிகளை இணைப்பது போன்ற கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை மீட்டுக்கொள்ள வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
நகரின் இதர பகுதிகளில் வங்கிகள், கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்களும் ஓடவில்லை.
இந்த மாநிலத்தில் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
ஆனால் தலைநகர் டெல்லி, கேரளா மற்றும் சில மாநிலங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
தொழிலாளர் போராட்டத்துக்கான காரணங்களை விளக்கிய அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம், பத்து வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றுவதால் வேலை இழப்பு அதிகரிக்கும் என்றார்.
"மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது, வங்கிகளின் வராக் கடன் அதிகரித்துள்ளது," என்று அவர் சொன்னார்.

