கோல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வன்முறையைத் தூண்டிவிட அனுமதிக்க இயலாது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் தவறாமல் தங்களுடைய பெயரை அதில் சேர்க்க வேண்டும் என்றார்.
"அதேவேளையில், யாராவது வெளியில் இருந்து வந்து உங்களுடைய பெயர், தந்தை பெயர், தாத்தா பாட்டி பெயர், எங்கு பிறந்தீர்கள் என்பன போன்றவற்றை கேட்டால், அதுகுறித்து எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்," என்று முதல்வர் மம்தா கூறியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், மேற்கு வங்க மாநில மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க ஒருபோதும் அனுமதிக்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் யாருடைய தயவிலும் வாழவில்லை. நமது உரிமையை யாரேனும் தட்டிப் பறிக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
"நான் உங்களது காவலாளி. உரிமைகளைப் பறிக்க யாராவது வந்தால், அவர்கள் எனது சடலத்தின் மீது ஏறி வந்துதான் பறிக்கமுடியும். எது குறித்தும் யாரும் அச்சப்படத் தேவையில்லை," என்றார் முதல்வர் மம்தா பானர்ஜி.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபூரியும், காங்கிரஸ் தொண்டர் சதாப் ஜாபரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, பொய்கள் ஒருபோதும் வென்றதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாராபூரி, சதாப் ஜாபர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நீதிமன்றம் ஆதாரம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாநில காவல்துறையினரோ உரிய ஆதாரங்களின்றி விழித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

