புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி நேற்று பேரணி நடந்தது.
நூற்றுக்கணக்கான மாணவர்களும் பேராசிரியர்கள் சிலரும் பேரணியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சுக்குச் சென்றனர்.
ஆனால் அவர்களை வழியில் போலிஸ் தடுத்து நிறுத்தியது.
பேரணியில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மண்டி ஹவுஸ் இடத்திலிருந்து புறப்பட்ட பேரணியை சாஸ்திரி பவன் அருகே போலிசார் தடுத்து நிறுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
பிறகு மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுடன் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து நேற்று மாணவர்கள் பேச்சு நடத்தினர்.
இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியது ஏபிவிபி மாணவர் குழுவினர்தான் என்று காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தப் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் 33 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதன் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

