‘ஹேர்பின்’ வளைவுகளைக் கொண்ட மலைப்பாதைகள் நிறைந்திருக்கும் கேரளாவில், வளைவில் வேகமாகத் திரும்பிய காரின் பின்புறக் கதவு திறந்து ஒரு குழந்தை கீழே தவறி விழுந்ததைக் காட்டும் காணொளி ஒன்று ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ் நெயின் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கண்காணிப்பு கேமரா ஒன்றிலிருந்து பெறப்பட்ட இந்தக் காணொளி பார்ப்போரை அதிரவைத்துள்ளது.
காருக்குப் பின்னால் வேகமாக வந்த மற்றொரு வாகனம் குழந்தை கீழே விழுந்ததைக் கண்டு வேகத்தைச் சட்டென்று குறைத்து நின்றதையடுத்து குழந்தை விபத்தில் சிக்காமல் தப்பித்தது. அதேபோல, எதிர்த் திசையில் வந்துகொண்டிருந்த பேருந்தும் சரியான நேரத்தில் வேகத்தைக் குறைத்து நின்றது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காணொளியைப் பதிவேற்றிய திரு பங்கஜ், “காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மீது கவனம் இருக்க வேண்டும். எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் இதைப்போல் அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள வனப்பகுதியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜீப்பில் பயணம் செய்யும்போது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் அந்த வாகனம் சென்றுவிட்டது. வனப்பகுதிக்கு அருகில் சுங்கச்சாவடி இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity