மும்பை: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் மற்றும் கல்லூரிக் கட்டண உயர்வைக் கண்டித்தும் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா
படுகோன், 34, ஆதரவு தெரிவித்தார். மாணவர்களை மர்மக் கும்பல் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மாணவர்களை நேரில் சந்தித்து களமிறங்கியது சமூக ஊடகங்களில் படத்துடன் பரவியது.
திடீரென போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தீபிகா செயல்பட்டது அவர் நடித்து நேற்று வெளியான 'சப்பாக்' திரைப்படத்திற்கு மாணவர்களிடம் ஆதரவு திரட்டவே என விமர்சனம் எழுந்தது.
அதேநேரம், 'சப்பாக்' படத்தைப் புறக்கணிக்கக் கோரும் தனியடைவு (ஹேஷ்டேக்) சமூக வலைத்
தளங்களில் பிரபலமானது. ஆயினும் நேற்று அந்தப் படம் வெளியான திரையரங்குகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்து உள்ளன. படம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று தீபிகா வழிபட்டார். அப்போது அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்போது நான் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தொடர்ந்து எனக்கு வரும் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை," என்றார்.

