புதுடெல்லி: இந்தியாவில் 2018ல் ஒவ்வொரு நாளும் 109 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
தேசிய குற்றச்செயல் பதிவு இலாகா இவ்வாறு தெரிவிக்கிறது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறார்கள் பாதிக்கப்பட்ட பாலியல் கொடுமைகளின் எண்ணிக்கை 2018ல் 22 விழுக்காடு கூடியது.
பாலியல் குற்றச்செயல்களில் இருந்து சிறார்களைக் காப்பதற்கான சட்டத்தின் (போஸ்கோ) கீழ் 2017ல் 32,608 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை 2018ல் 39,827 ஆக உயர்ந்தது.
2018ல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறார்கள் 21,605 பேர். இத்தகைய கொடுமைக்கு ஆளான பதின்ம வயதுப் பெண்கள் 21,401 பேர். பையன்கள் 204 பேர் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் சிறார்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆக அதிகமாக (2,832) நிகழ்ந்தன. இதில் உத்தரப்பிரதேசம் அடுத்த நிலையில் இருக்கிறது (2,023). தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு 1,457 சிறார்கள் 2018ல் ஆளாகி இருக்கிறார்கள் என்று அந்த இலாகா கூறுகிறது.
மொத்தத்தில் பார்க்கையில் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் 2008 முதல் 2018 வரைப்பட்ட 10 ஆண்டுகளில் ஆறு மடங்கிற்கும் அதிகமாகக் கூடிவிட்டன. 2008ல் புகார்களின் எண்ணிக்கை 22,500 ஆக இருந்தது. அது 2018ல் 141,764 ஆக அதிகரித்தது.
இதனிடையே, இந்தியாவில் 2014 முதல் 2018 வரைப்பட்ட ஆண்டுகளில் ஏறக்குறைய 1,500 அமிலத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகவும் அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 596 பேர் மீது அமிலம் ஊற்றப்பட்டது.
2017ஆம் ஆண்டில்தான் ஆக அதிகமாக நடந்த 309 அமிலத் தாக்குதல்களில் 319 பேர் பாதிக்கப்பட்டனர்.
2017-2018ல் மொத்தம் 596 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 623 பேர் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் வழக்குத் தொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தெரிவதாகவும் தேசிய குற்றச்செயல் பதிவு இலாகா குறிப்பிடுகிறது.
2014 முதல் 2018 வரை மிக அதிகமாக அமிலத் தாக்குதல் நடத்தப்பட்ட 10 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி ஆகியவை முதல் இடங்களைப் பெற்றுள்ளன.