கோல்கத்தா: விமானப் படையின் அவசர தேவையைச் சமாளிக்கும் பொருட்டு புதிதாக 200 அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தற்காப்புச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
‘இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் 83 இலகுரக தேஜஸ் மார்க்-1 ஏ அதிநவீன போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் இவ்வாண்டு இறுதிக்குள் உறுதியாக அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்றும் திரு அஜய் குமார் கூறினார்.
இதனுடன், மேலும் 110 விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், “ஒட்டுமொத்தமாக, கிட்டத்தட்ட 200 விமானங்கள் வாங்கப்படவுள்ளன,” என்றார்.
விமானப் படைக்குப் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு வேகமாக அதைச் செய்து முடிப்போம்,” என்று அவர் பதிலளித்தார்.
வடிவமைப்பு உறுதிசெய்யப்பட்டதும் இந்திய அரசாங்க நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட்’, ஆண்டுக்கு 8 முதல் 16 தேஜஸ் இலகுரக போர் விமானங்களைத் தயாரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
“தேவைப்பட்டால், வெளிநிறுவனங்கள் மூலமாக அந்த விமானங்களை மேம்படுத்துவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோல்கத்தாவில் நேற்று முன்தினம் இந்திய கடலோர காவல் படைக்குக் கப்பல்களைச் சேர்க்கும் விழா இடம்பெற்றது. அதில் பங்கேற்றபோது திரு அஜய் குமார் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இந்திய விமானப் படையில் தற்போது சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, ஜாகுவார், மிக் 21 பைசன் போன்ற விமானங்கள் இருக்கின்றன.
1997 கார்கில் போரின்போது ‘சுவிங்-விங் மிக் 27’ ரக போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஏழு மிக்-27 விமானங்கள், விமானப் படையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.