நியூயார்க்: உலக நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாரத்திற்கு ஒன்பது சேவைகளை அதிகரித்தது. இதனுடன் சேர்த்து இந்தியாவுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்சின் மொத்த சேவை 104ஆக அதிகரித்துள்ளது.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அண்மையில் சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புதுடெல்லி வரை இடையில்லா சேவையைத் தொடங்கியது.
சென்ற டிசம்பர் மாதம் டெல்டா ஏர்லைன்சும் நியூயார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு இடையில்லா விமான சேவையைத் தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளில் எண்பது அனைத்துலக விமான சேவைகளில் இருபதுக்கும் மேற்பட்ட சேவைகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு முதற்பாதியிலிருந்து 2019ஆம் ஆண்டு முதற்பாதி வரை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவை 10.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் குளோபல் பிசினஸ்’ என்ற நிறுவனம் தெரிவித்தது.
இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் 2024ஆம் ஆண்டில் இந்தியா உலகிலேயே 3வது ஆகப் பெரிய விமான சந்தையாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சீனாவையும் இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடலாம்.
உலக முழுவதும் உள்ள பொருளியல், சமூக, குடிநுழைவு, பயணத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தால் விமான சேவைகள் அதிகரித்துவருகின்றன.
இதற்கிடையே அதிகமான அனைத்துலக சமூக ஊடகங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவில் கடைகளை அமைத்து வருகின்றன அல்லது ஊழியர்களை அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட பல நாடுகளில் வேலை செய்யும் அல்லது வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் பாரம்பரியமாக சொந்த நாட்டில் குடும்பப் பிணைப்புகளை வைத்துள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு வந்து செல்லும் பயணங்கள் மேலும் பரவலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.