புதுடெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ரூ.1,264 கோடி செலவு செய்திருப்பதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.
தேர்தலின் போது குறிப்பிட்ட தொகையை மட்டுமே பிரசாரம் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளுக்கும் செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அளவுகோல் நிர்ணயித்துள்ளது.
தேர்தல் செலவுக் கணக்குகளை அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆறு தேசியக் கட்சிகளுக்கு 2018-19ஆம் நிதி ஆண்டில் ரூ.3,698 கோடி வருமானமாக கிடைத்தது தெரிய வந்துள்ளது. இந்த வருமானப் பட்டியலில் பாஜக முதலிடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ரூ.2,410 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.918 கோடியும், திரிணாமூல் காங்கிரசுக்கு ரூ.192 கோடியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.100 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளன. பாஜக தனது வருமானத்தில் சரிபாதியை தேர்தலுக்காகச் செலவிட்டுள்ளது.
இதில் பிரசாரத்துக்கு மட்டும் 1,078 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. வேட்பாளர்களுக்கு ரூ.186 கோடி கொடுத்ததாகவும், பொதுக்கூட்டங்கள் நடத்த ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.