1993ஆம் ஆண்டு ராஜஸ்தான் வெடிகுண்டு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட டாக்டர் ஜலீஸ் அன்சாரி அண்மையில் 21 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அவர் சிறை திரும்பாததை அடுத்து போலிசார் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர். டாக்டர் அன்சாரி நேற்று முன்தினம் காலை வீட்டைவிட்டுக் கிளம்பியதாகவும் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, டாக்டர் அன்சாரியைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, குற்றவியல் பிரிவு, மும்பை போலிஸ் படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் டாக்டர் அன்சாரியை வலை வீசித் தேடி வருகின்றனர்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்ததாக டாக்டர் அன்சாரி 1994ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவெங்கும் நிகழ்ந்த 50க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சம்பவங்களுக்கும் டாக்டர் அன்சாரிக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அஜ்மீரில் உள்ள சிறையில் அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.
தம்மை பரோலில் விடும்படி டாக்டர் அன்சாரி முதன்முதலில் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார். டாக்டர் அன்சாரி தாக்கல் செய்த மனுவை ஏற்று அவரை பரோலில் விடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வெடிகுண்டு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட டாக்டர் அன்சாரி சிறைக்குத் திரும்பாமல் மாயமாகி இருப்பது மும்பையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.