சென்னை: இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பற்றிய விவாதத்தில் நேற்று அமைச்சர் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்தியாவில் முன்பு உருவாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இப்போதைய பாஜக அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வருகிறது என்றும் இருந்தாலும் ஒரு சில அம்சங்கள் மட்டுமே திருத்தமாக அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது என்பதால் அதை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கு உண்டு என்ற நிர்மலா சீதாராமன், அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தப் போவதில்லை என்று மாநிலங்கள் கூறினால் அது சட்டவிரோத நடவடிக்கையாகவே இருக்கும் என்று எச்சரித்தார்.
அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தியாவின் பக்கத்து நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்திருப்பதாகவும் ஆனால் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படமாட்டாது என்று யாரும் நினைக்கக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இலங்கை தமிழர்கள் 95,000 பேர் பல முகாம்களில் அகதிகளாக இருப்பதாகவும் அவர்களுக்குக் குடியுரிமை அளிக்க வழி வகை செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி கூறினார்.