புதுடெல்லி: தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதை எதிர்கொள்ள இந்தியாவிடம் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையும், கடல்சார் தொடர்புகளை விரிவுபடுத்தவும் இலங்கை கோரியுள்ளது. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையில் கால்பதித்துள்ளது சீனா. அங்கு துறைமுக கட்டுமானம், விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. இதே போல் மாலத்தீவிலும் கால்பதித்துள்ளது சீனா.
இந்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது கடல்சார் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை அமைப்பது குறித்து இருதரப்பும் ஆலோசித்ததாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.
எனினும் அந்த மையம் குறித்து மேலதிக தகவல்கள் ஏதுமில்லை. அதேசமயம் தெற்காசிய வட்டாரத்தில் உள்ள சில நாடுகள் பார்வையாளராக சேர்த்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்குவது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை நடத்தியதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அதிபர் கோத்தபாய இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என இந்தியா அறிவித்தது. இந்நிலையில் இரு நாடுகளும் ராணுவ ரீதியில் இணக்கமாகச் செயல்பட முன்வந்துள்ளன.