இந்தூர்: இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் இறக்குமதிக்கு அதிக அளவில் செலவு செய்வதை முதலில் நிறுத்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
எதிர்வரும், 2024ஆம் ஆண்டுக்குள், இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான் என்றாலும், அது நடக்காத காரியம் அல்ல என்று இந்தூர் மேலாண்மை சங்கத்தின் 29ஆவது அனைத்துலக மாநாட்டில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
“உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்டில் ஏராளமான வளங்களும், உற்பத்தி செய்யும் திறனும் உள்ளன.
“எனினும், மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், நிலக்கரி, செம்பு, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறோம்,” என்றார் அமைச்சர் நிதின் கட்காரி.
இந்தியாவில் மூலதனம், வளம், தொழில்நுட்பம் என எதிலும் பற்றாக்குறை இல்லை என்று குறிப்பிட்ட அவர், பல துறைகளில் சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை என்பதுதான் பெரும் குறைபாடு என்றார். “சிரமங்களையும் சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றும் திறன்கொண்ட இளைய தலைவர்களிடம் இந்தியாவின் எதிர்காலத்தை நான் காண்கிறேன். ஏற்றுமதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். அது ஐந்து கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்,” என்றார் அமைச்சர் நிதின் கட்காரி.