திருமயத்தில் 17 பவுன் தங்கநகைகளை கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நாடியம்மாள் என்ற பெண்ணுக்கு காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 17 பவுன் தங்க நகைகள், 500 ரூபாயுடன் கைப்பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதை அவ்வழியே சென்ற திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் என்பவர் எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து நகைகளை திருமயம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் ஒப்படைத்தார்.
இந்த தங்க நகைகள் திருமயம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனாள் என்பவருக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நகை, ரொக்கம் அடங்கிய கைப்பையை மீனாளிடம் ஒப்படைத்தனர். மனிதநேயம் மிக்க செயலில் ஈடுபட்ட நாடியம்மாள், சிக்கந்தரை காவல்துறை அதிகாரிகள் மனமாரப் பாராட்டினர். படம்: ஊடகம்