சிக்கமகளூர்: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா அப்சரகொடிகே கிராமத்தை சேர்ந்தவர் சுசிலா (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் சிருங்கேரி நகரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் தனது கிராமத்தில் இருந்து ஒத்தையடிப் பாதை வழி நாகரகல்லு கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்து சிருங்கேரிக்குப் பேருந்தில் செல்வது வழக்கம். அதுபோல் கல்லூரி முடிந்து திரும்பும் போதும் மாணவி சுசிலா சிருங்கேரியில் இருந்து பேருந்தில் நாகரகல்லு சென்று, பின்னர் அங்கிருந்து ஒத்தையடிப் பாதை வழியாகச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி மாணவி சுசிலா கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்ததும் மதியம் தனது ஊருக்கு அவர் தனியாகத் திரும்பினார். நாகரகல்லு கிராமத்தில் இருந்து அப்சரகொடிகே கிராமத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் அவரை அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 25), பிரதீப் (27) ஆகிய இருவரும் வழிமறித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து மாணவியைக் குண்டுக்கட்டாக அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்றனர். பின்னர் இருவரும் மாறி, மாறி சுசிலாவை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளனர். தங்களை காட்டிக் கொடுத்துவிடுவார் எனக் கருதிய இருவரும் சேர்ந்து சுசிலாவைக் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கக் கம்மலையும் மூக்குத்தியையும் எடுத்துக்கொண்டு, அவரது உடலை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டுத் தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் கல்லூரியில் இருந்து சுசிலா வீடு திரும்பாததால் மகளைக் காணவில்லை என சுசிலாவின் பெற்றோர், சிருங்கேரி காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மூன்று நாள் கழித்து அப்சரகொடிகே கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் சுசிலா பிணமாக மிதந்தது தெரியவந்தது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில், சுசிலா பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போதுதான் சந்தோஷ், பிரதீப் ஆகிய இருவரும் பல பெண்களை மிரட்டி சீரழித்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், “இருவரும், கல்லூரி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சுசிலாவைக் கற்பழித்துக் கொலை செய்து, உடலைக் கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக சிக்கமகளூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி நடந்த விசாரணையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நீதிபதி உமேஷ் எம்.அடிகா, குற்றவாளிகள் இருவருக்கும் தூக்குத்தண்டனையும் தலா ரூ.25 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தார். இந்தத் தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.