தஞ்சாவூர்: தஞ்சைப் பெரிய கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதில் வழிபாடுகளைத் தமிழில் நடத்த வலியுறுத்தி இன்று தஞ்சாவூரில் வேண்டுகோள் மாநாடு நடைபெறும் என தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
“இந்த மாநாட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், அறநிலையத்துறை முன் னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்,” என்றார் அவர்.
இந்நிலையில் சமஸ்கிருதம், தமிழ் இரண்டு முறைகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மா.ஃபா. பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே இவ்வாறு கூறலாமா?” என்று கேட்டுள்ளார் மணியரசன்.
காலங்காலமாக தமிழ்நாட்டில் சிவநெறி, திருமால் நெறி கோயில்களில் தமிழில்தான் அர்ச்சனை,வழிபாடுகள் நடந்துள்ளன. இந்த மரபை இடைமறித்து மாற்றி சமஸ்கிருதத்தை ஒருசாரார் இங்குள்ள கோயில்களில் திணித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பை நீக்கி தமிழ் வழிபாட்டு அர்ச்சனையும் குட முழுக்கும் நடைபெறவேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கை.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் “இந்து சமயம் ஒற்றைத் தெய்வ, ஒற்றைமொழி வழிபாட்டைக் கொண்டதல்ல. பல்வேறு வகை கோயில்களும் வழிபாடுகளும் இருக்கின்றன. அந்தந்த வகை கோயிலின் மரபுப்படி அர்ச்சகர்களை அமர்த்தவும் அர்ச்சனை செய்துகொள்ளவும் உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
“எனவே, தமிழக அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குட முழுக்கை சிறிதும் சமஸ்கிருத கலப்பின்றி தமிழ் வழியில் மட்டுமே நடத்தவேண்டும்,” என திரு மணியரசன் தெரிவித்துள்ளார்.