அமராவதி: ஆந்திர மாநிலத் தலைநகராக அமராவதி உள்ளது. இந்நிலையில், அதை சட்டமன்றத் தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என மூன்று தலைநகரங்களை உருவாக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அமராவதியை உருவாக்க நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் 3 தலைநகர் அமைப்பதற்கான தீர்மானத்தைத் தாக்கல் செய்ய ஆந்திர சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.
பல்வேறு பகுதிகளில் இருந்து இரு கட்சித் தொண்டர்களும் நேற்று சட்டமன்றத்தை நோக்கிப் படையெடுத்தனர்.
அவர்களை வரவிடாமல் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் இதில் சில பெண்கள் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. கோல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டன.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
குண்டூர் நாடாளுமன்ற உறுப்பினர் கல்ல ஜெயதேவ் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேச சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு ஊர்வலமாகச் சென்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, மூன்று தலைநகரங்களை உருவாக்கும் தீர்மான அறிக்கையை, சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் புக்கனா ராஜேந்திர நாத் தாக்கல் செய்தார்.
தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து முழங்கினர். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உரையாற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின்னர் மூன்று தலைநகரங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.