திருவனந்தபுரம்: கண்ணூர் மாவட்டத்தின் கோட்டியூர் அருகே உள்ள அம்பயதோட் நகரில், நேற்று அதிகாலை திடீரென மாவோயிஸ்ட்டுகள் திரண்டுள்ளனர். அருகில் உள்ள காட்டுப்பகுதி வழியாக நகருக்குள் நுழைந்த ஒரு பெண் உள்ளிட்ட அனைவரும் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி, கேரள மாநிலம் அட்டப்பாடி மலைப்பகுதியில் கேரள காவல்துறையின் ‘தண்டர்போல்டு’ படையினரால் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் சரணடைய முன்வந்த நிலையில் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், அட்டப்பாடி கொலை சம்பவத்துக்குக் கேரள அரசு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்த மாவோயிஸ்ட்டுகள், இந்தச் சம்பவத்தில் கொட்டப்பட்ட ரத்தத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசின் ஆப்ரேஷன் சமாதானத் திட்ட நடவடிக்கைக்கு எதிராக, வரும் 31 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.
அதை அறிவிக்கும் வகையில் அட்டப்பாடி பகுதியைச் சார்ந்த இடங்களில் கைப்பிரதிகளை அவர்கள் விநியோகித்து வருகின்றனர். பல இடங்களில் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போலிசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் பதாகைகளில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நக்சல் இயக்கங்களை ஒடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை ஆதிவாசிக் குடியினரும் மாவோயிஸ்டுகளும் கடுமையாகக் கண்டித்திருந்தன.
‘ஆபரேஷன் சமாதான்’ என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்துள்ள மாவோயிஸ்ட்டுகள், இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு ஆதரவான செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து அப்பகுதி தைகுலம் ஆதிவாசி மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சிவானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட்டுகள் போலிசிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சரணடைய முன்வந்தனர். அப்படியிருந்த சமயத்தில்தான் போலிசார் அவர்களை சுட்டுக்கொன்றனர் என்று திரு சிவானி போலிசார் மீது குற்றம் சாட்டினார்.