டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளியல் கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசி உள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
காஷ்மீரைப் பற்றியும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசினோம். எங்களால் உதவ முடிந்தால், நாங்கள் நிச்சயமாக உதவுவோம். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
“இந்தியாவுடனான பிரச்சினை பெரிய பிரச்சினை. வேறு எந்த நாட்டினாலும் முடியாது என்பதால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அமெரிக்கா உதவும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்,” என இம்ரான் கான் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா விரும்பாத நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட ஆர்வம் காட்டுகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்ட பிறகு நான்காவது முறையாகக் காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் தனது விருப்பத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அநேகமாக பிப்ரவரி மாத இறுதியில் குறிப்பாக 24, 25 ஆம் தேதிகளில் டிரம்ப் இந்தியா வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கையை விரைவில் இரு நாடுகளும் வெளியிட உள்ளன. டிரம்ப் வருகையின் போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.