காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் பிணையில் வெளியே வந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் ரவுடி எழிலரசியைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலிஸ் புதுச்சேரி சிறையில் அடைத்தது.
பிரபல சாராய வியாபாரி ராமுவின் 2வது மனைவியான எழிலரசியையும் ராமுவையும் அவரின் முதல் மனைவியான வினோதா கொலை செய்ய முயன்றார். அதில் ராமு கொல்லப்பட்டார்.
தப்பிய எழிலரசி தன் ஆதரவாளர்களைக் கொண்டு முதல் மனைவி வினோதாைவயும் அவரின் உறவினரையும் கொன்றார்.
மேலும் பழிதீர்க்கும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சிவக்குமாரை எழிலரசியின் ஆதரவாளர்கள் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக எழிலரசி மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு கொலை வழக்கில் இருந்து பிணையில் வெளியே வந்த எழிலரசி, ரவுடி தொழிலைக் கைவிட்டு, பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்குச் சேவை செய்வதற்காக, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழிலரசி அறிவித்திருந்தார்.
இதனிடையே, எழிலரசி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் வெளியே இருந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்து போலிஸ், எழிலரசியைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது.
எழிலரசி மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எழிலரசி கைது பரபரப்பாகியுள்ளது.